52 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு கலெக்டர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் 52 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினா

Update: 2023-03-12 18:45 GMT

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டத்தில் 52 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

கணக்கெடுப்பு பணி

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்த்து 8-ம் வகுப்பு வரை தொடர்ந்து கல்வி பயில்வதை கண்காணித்து அடிப்படை கல்வியை முடிக்க செய்வதுடன் பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகளை கண்டறிதல், பள்ளிகளில் சோ்த்தல், சிறப்பு பயிற்சி மையங்கள் தொடங்குதல், தொடக்கக்கல்வி முடிக்கும் வரை கண்காணித்தல் ஆகியவை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் பணிகளாகும்.

இதற்காக கலெக்டர் தலைமையில் செயல்படும் குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு செயல்படுகிறது. இந்த குழு மூலம் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க மாதம் இருமுறை கூட்டாய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

52 மாணவ, மாணவிகள்

இந்த குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவின் மூலம் 11 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற 52 மாணவ, மாணவிகள் கண்டறியபட்டனர்.

இதை தொடர்ந்து அந்த குழுவினர் பள்ளி செல்லா குழந்தைகளின் வீட்டிற்கே சென்று அவர்களுக்கும், பெற்றோருக்கும் தகுந்த அறிவுரை வழங்கி, மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்