சிறையில் இறந்த புளியங்குடி வாலிபரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதியுதவி

பாளையங்கோட்டை சிறையில் இறந்த புளியங்குடி வாலிபரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது

Update: 2023-06-23 18:45 GMT

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் தங்கச்சாமி (வயது 26). இவரை மது விற்றதாக கூறி, புளியங்குடி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தங்கச்சாமி கடந்த 14-ந்தேதி திடீரென உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே தங்கச்சாமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கடந்த 9 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் தங்கச்சாமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், அரசு சார்பில் ரூ.3 லட்சமும், தங்கச்சாமியின் தாயாருக்கு முதியோர் உதவித்தொகையும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டு, தங்கச்சாமியின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதித்தனர்.

அதன்படி நேற்று காலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு தங்கச்சாமியின் தாயார் மற்றும் உறவினர்கள் வந்தனர். அவர்களிடம் தங்கச்சாமியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான புளியங்குடிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரது உடல் போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா, தங்கச்சாமியின் வீட்டுக்கு சென்று, தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை அவரது தாயார் கருப்பியிடம் வழங்கினார். மேலும் மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சத்தை மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்