பார்முலா 4 கார் பந்தயம்: பிற்பகலுக்கு மேல் பிரதான ரேஸ் போட்டிகள்

சென்னையில் பிற்பகலுக்கு மேல் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான ரேஸ் போட்டிகள் தொடங்குகிறது.

Update: 2024-09-01 09:28 GMT

சென்னை,

இந்த ஆண்டுக்கான பார்முலா4 கார்பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 2-வது சுற்று போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி சென்னை தீவு திடலை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சாலை பந்தயத்திற்கான ஓடுதளமாக மாற்றப்பட்டது. தெற்காசியாவில் முதல்முறையாக ஸ்டீரிட் சர்க்யூட்டில் நடக்கும் இந்த போட்டிக்காக இரவிலும் பகல்போல் ஜொலிக்கும் வகையில் இருபுறமும் மின்னொளி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், பார்வையாளர்களுக்காக சுவாமி சிவானந்தா சாலையில் 5 இடங்களில் பிரத்யேக இருக்கைகள் அமைக்கப்பட்டன. பிற்பகல் 2.30 மணிக்கு பயிற்சியுடன் போட்டியை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் முந்தைய நாள் இரவு பெய்த மழை காரணமாக ரேஸ் நடத்துவதற்கான சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் (எப்.ஐ.ஏ.) தரச்சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பிற்பகலில் நடக்க இருந்த பயிற்சி, தகுதி சுற்றும் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.

மாலையில் எப்.ஐ.ஏ. அனுமதி சான்றிதழ் முறையாக கிடைத்தபின் பயிற்சி சுற்றுகள் மட்டும் நடத்தப்படும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இரவு 7.10 மணிக்கு அண்ணா சாலையில் போட்டியின் தொடக்க விழா நடந்தது. தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

இரவு 9 மணிக்கு பிறகு ஜே.கே. எப்.எல்.ஜி.பி., இந்தியன் தேசிய லீக் (ஐ.ஆர்.எல்.), பார்முலா4 கார்பந்தய டிரைவர்கள் பயிற்சியில் உற்சாகமாக ஈடுபட்டனர். அவர்கள் போட்டி போட்டுக் கடும் இரைச்சலுடன் முந்தி சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இன்று காலை தகுதி சுற்று மற்றும் இரவில் பார்முலா 4 கார் பந்தயங்கள் நடக்கின்றன. பிற்பகலுக்கு மேல் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான ரேஸ் போட்டிகள் தொடங்குகிறது. தற்போது பயிற்சி போட்டி நிறைவுப்பெற்ற நிலையில் தகுதிச்சுற்று போட்டி தொடங்க உள்ளது.

இதில் 8 அணிகளை சேர்ந்த 16 வீரர்கள் பங்கேற்கிறார்கள். பந்தயத்திற்கு 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். இதற்குள் யார் அதிக தடவை 3.5 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருகிறார்களோ அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்