ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று, கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க தடை

ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று, கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-19 18:37 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று, கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

விசைப்படகுகள்

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது.

இதனிடையே பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல அதிகாரிகளால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீன்துறை அதிகாரிகளின் அறிவிப்பை தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் நேற்று 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் பாம்பன், மண்டபம், தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 5000-க்கும் அதிகமான விசைப்படகு நாட்டு படகு, பைபர் படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடல் சீற்றம்

இதனிடையே தனுஷ்கோடி பகுதியில் 2-வது நாளாக பலத்தை சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது.

குறிப்பாக எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் மோதி கடல் அலையானது பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக சீறி எழுந்து வருகின்றது.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் மற்றும் பாம்பன் வடக்கு, தெற்கு கடல் பகுதியிலும் நேற்று காலை வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கியே காணப்பட்டது.

கடல் உள்வாங்கி காணப்பட்ட நிலையில் மீண்டும் 11 மணிக்கு பிறகு மீண்டும் கடல் நீர் ஏறி அந்த பகுதியானது சகஜ நிலைக்கு திரும்பியது.

Tags:    

மேலும் செய்திகள்