பெண் டாக்டர் கொலை சம்பவம்: குஷ்புவுக்கு கனிமொழி எம்.பி. பதிலடி

பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-08-17 21:41 GMT

தூத்துக்குடி,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் (முதுநிலை மருத்துவ மாணவி) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. மூத்த தலைவர் குஷ்பு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் தி.மு.க. எம்.பி. கனிமொழி, மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பாக வாய் திறக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறும்போது, "கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதற்கு நான் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

பெண் டாக்டர் கொலை சம்பவம் நடந்த உடனேயே நான் எனது டுவிட்டரில் கண்டனத்தையும், வருத்தத்தையும் பதிவு செய்துள்ளேன். குஷ்புவை முதலில் அதை பார்க்க சொல்லுங்கள். அதன் பிறகு பேச சொல்லுங்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்