புளியங்குடியில் சோகம்: மொபட் மீது கார் மோதி விவசாயி, பெண் பலி

புளியங்குடியில் மொபட் மீது கார் மோதியதில் விவசாயி, பெண் பலியானார்கள்

Update: 2022-07-03 16:18 GMT

புளியங்குடி:

புளியங்குடியில் மொபட் மீது கார் மோதியதில் விவசாயி, பெண் பலியானார்கள்.

வயல் வேலைக்கு...

தென்காசி மாவட்டம் புளியங்குடி வேலாயுதம் குடும்பத்தெருவைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன் (வயது 48). இவருக்கு சொந்தமான வயல் புளியங்குடி நவ்வாசாலை பகுதியில் உள்ளது. புளியங்குடி சிந்தாமணி அம்பேத்கர் 4-வது தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி கலாராணி (38). இவர் அன்புச்செல்வன் வயலில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் அன்புச்செல்வன் வயல் வேலைக்கு கலாராணியை தனது மொபட்டில் ஏற்றி சென்று கொண்டிருந்தார்.

2 பேர் பலி

புளியங்குடி சிந்தாமணி பகுதியில் சென்றபோது, கும்பகோணத்தில் இருந்து குற்றாலம் நோக்கி ஒரு கார் வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் கார்-மொபட் மோதிக் கொண்டது. இதில் மொபட், காருடன் சேர்த்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது மொபட் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அன்புச்செல்வன், கலாராணி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். காரை ஓட்டி வந்த கும்பகோணம் திருநகர் காலனியைச் சேர்ந்த சாதிக் (43) என்பவர் லேசான காயம் அடைந்தார். காரில் இருந்த மற்ற 6 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாதிக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த அன்புச்செல்வனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கலாராணியின் கணவர் கருப்பசாமி மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு விஷால், சந்தனபாண்டி ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

புளியங்குடியில் மொபட் மீது கார் மோதியதில் விவசாயி, பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்