மாரண்டஅள்ளி அருகேயானைகள் தாக்கி தொழிலாளி சாவு

Update: 2023-04-21 19:00 GMT

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டியில் காட்டு யானைகள் தாக்கி முதியவர் இறந்தார்.

கூலித்தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டி ஏரி கொட்டாய் இருளர் காலனியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 71). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக வட்டகானம்பட்டியில் வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 2 காட்டு யானைகள் காளியப்பன் முன் வந்து நின்றன.

இதை சற்றும் எதிர்பாராத காளியப்பன் யானைகளிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் 2 யானைகளும் சேர்ந்து காளியப்பனை தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டன. இதில் பலத்த காயம் அடைந்த காளியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

அச்சம்

இதனை தொடர்ந்து அந்த வழியாக சென்ற கிராம மக்கள் காளியப்பன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்இதுகுறித்து அவர்கள் மாரண்டஅள்ளி போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் காளியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்