போலீஸ் விசாரணையின்போது பல்லை பிடுங்கியதற்கு இழப்பீடு கேட்டு வழக்கு- நெல்லை கலெக்டர், சூப்பிரண்டு பதில் அளிக்க நீதிபதி உத்தரவு

போலீஸ் விசாரணையின்போது பல்லை பிடுங்கியதற்கு இழப்பீடு கேட்ட வழக்கில் நெல்லை கலெக்டர், சூப்பிரண்டு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்

Update: 2023-10-03 20:39 GMT


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சதீஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

பொய் வழக்கு ஒன்றில் அம்பாசமுத்திரம் போலீசார் சட்டவிரோத காவலில் என்னையும், எனது சகோதரர் அருண்குமாரையும் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்தனர். இதில் அருண்குமாரின் 4 பற்கள் உடைக்கப்பட்டன.

எனவே, பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் எனக்கும், எனது சகோதரருக்கும் வன்கொடுமை தடுப்புச்சட்ட விதிகளின்படி இழப்பீடு வழங்க வேண்டும். இதுகுறித்து எனது தாயார் ராஜேசுவரி கடந்த ஜூன் மாதம் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். எனவே, போலீஸ் அதிகாரிகளின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச்சட்ட விதிகளின்படி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்