தேர்தல் களத்தில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வெற்றிக்கு வழி வகுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் - முத்தரசன்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-04 12:40 GMT

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நடந்து முடிந்த 18-வது நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள், இந்தியா கூட்டணி சார்பில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இந்தியா கூட்டணிக்கு எதிராகவும், இந்தக் கூட்டணியை உருவாக்கி வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த தி.மு.கழகத்தின் மீதும் பா.ஜ.க. தலைவர்கள் வெறுப்பூட்டும் அருவருப்பு பரப்புரையில் ஈடுபட்டனர்.

அதிகாரத்தையும், அளவற்ற பண செல்வாக்கையும் பயன்படுத்தி பல்வேறு பகுதியினரை மிரட்டி, ஆதரவு தெரிவிக்குமாறு நிர்பந்தித்தனர். பிரதமர் மோடி ஒன்பது முறை தமிழ்நாட்டுக்கு வந்து பரப்புரை மேற்கொண்டார். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நின்ற ஊடகங்கள் செய்தி என்ற பெயரிலும், கருத்து கணிப்பு என்ற பெயரிலும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை திணித்து குழப்பங்களை ஏற்படுத்தி வந்தனர்.

இவை அனைத்தையும் நிராகரித்து புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும், ஆதரித்த பொதுமக்களுக்கும், தேர்தல் களத்தில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வெற்றிக்கு வழி வகுத்த தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்