மணிப்பூர் வன்முறையை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் வன்முறையை கண்டித்து தி.மு.க மகளிர் அணி சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-25 06:24 GMT

திருவள்ளுர், 

தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க சார்பில் மணிப்பூர் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் மணிப்பூர் வன்முறையை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க மாநில துணை அமைப்பாளர் சேலம் சுஜாதா கலந்து கொண்டு கண்டனவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் அரசைக் கண்டிக்க தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் கிழக்கு தி.மு.க சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்னேரியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் சோழவரம் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தேசராணிதேசப்பன், மாவட்ட தலைவர் உமாகாத்தவராயன், பொன்னேரி நகராட்சி தலைவர் பரிமளம் விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

மீஞ்சூர் பஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மணிப்பூர் கலவரம் மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் ஜெயவேல் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஏ.எஸ். கண்ணன் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் கோபால், மாநில விவசாய சங்க தலைவர் துளசி நாராயணன், பழவைநித்தியானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தி.மு.க, விடுதலை சிறுத்தை கட்சிகள், காங்கிரஸ் கட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்