போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும், கீழ்கோர்ட்டில் ஜாமீன் மனுவை மனுதாரர் தாக்கல் செய்யலாம் என்றும் மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

Update: 2022-07-04 19:57 GMT

மதுரை

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும், கீழ்கோர்ட்டில் ஜாமீன் மனுவை மனுதாரர் தாக்கல் செய்யலாம் என்றும் மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

இரட்டைக்கொலை வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் அங்குள்ள போலீஸ்நிலையத்தில் சட்டவிரோத காவலில் வைத்து தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் உள்பட 9 போலீசார் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஜாமீன் கோரி மனு

இந்த வழக்கில் கைதான போலீசார் ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாகின. இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், "சுமார் 2 வருடங்களாக நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளோம். வழக்கு விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனக்கு ஜாமீன் அளிக்கும்பட்சத்தில் கோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன்" என கூறியிருந்தார்.

கீழ்கோர்ட்டுக்கு செல்ல அறிவுறுத்தல்

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சி.பி.ஐ. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விசாரணை முடிவில், சம்பந்தப்பட்ட கீழ்கோர்ட்டில் மனுதாரர் மனுதாக்கல் செய்து, உரிய பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்று கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்