தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. கடல்வழியாக தூத்துக்குடியில் ஊடுருவ முயன்ற 15 பேரை கடலோர பாதுகாப்பு போலீசார் மடக்கி பிடித்தனர்.

Update: 2022-11-15 19:42 GMT

தூத்துக்குடி,

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக நுழைந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கடலோர பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் உருவாக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வபோது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், தீவிரவாதிகள் போன்று வேடம் அணிந்து முக்கிய இடங்களில் ஊடுருவ முயற்சி செய்வதும், அவர்களை அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவது போன்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது. ஆபரேசன் ரக்சக், ஆபரேசன் சுரக்சா, ஆபரேசன் பேரிகார்டு, ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் சாகர் கவாச், சீ விஜில் போன்ற பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

ரோந்து பணி

அதன்படி நேற்று காலை முதல் தமிழக கடலோர பகுதிகளில் சீ விஜில் என்னும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், கியூ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்புபடை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

15 பேர் கைது

அப்போது தூத்துக்குடியில் இருந்து 6 கடல்மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக 2 விசைப்படகுகள் நின்று கொண்டு இருந்தன. உடனடியாக கடலோர பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று அந்த படகுகளை மடக்கினர். ஒரு படகில் மொத்தம் 15 பேர் இருந்தனர். அதில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் பயங்கரவாதிகள் போன்று வேடம் அணிந்து தூத்துக்குடியை தாக்க வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 15 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல, நாகப்பட்டினம், வேதாரண்யம், கன்னியாகுமரி கடலிலும் போலீசார் அதிநவீன ரோந்து படகில் சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இன்றும் (புதன்கிழமை) இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. இதனால் அனைத்து பாதுகாப்பு துறையினரும் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்