மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெண் பலி

காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெண் பலியானார்.

Update: 2023-10-19 19:30 GMT

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெண் பலியானார். 

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கல்பனா (48). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.

இதனிடையே, கல்பனா நேற்றுமுன் தினம் தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அந்நிறுவனத்தின் உரிமையாளர் புருசோத்தமனுடன்  மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். காவேரிப்பட்டணத்தில் இருந்து தர்மபுரி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விசாரணை

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த கல்பனா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். புருசோத்தமன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவேரிப்பட்டணம் போலீசார் புருசோத்தமனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கல்பனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்