இருதரப்பினர் இடையே மோதல்; 4 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-03-04 19:28 GMT

இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோதல்

திருச்சி பாலக்கரை வடக்கு கல்லுக்கார தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 24). இவரும் பெரியமிளகுபாறையை சேர்ந்த சிவக்குமார் (49) என்பவரும் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கடையை வாடகைக்கு நடத்தி வருகின்றனர். தொழில் போட்டியால் இவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின்பேரில் கோகுல்நாத், சிவக்குமார் உள்பட 4 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாயம்

* திருச்சி கே.அபிஷேகபுரம் மேலப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அஜிஸ்துல்லா (75). மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் வீ்ட்டைவிட்டு வெளியே சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

* தஞ்சாவூர் மாவட்டம் அயனபுரம் தொண்டராயன்பாடியை சேர்ந்தவர் பிராங்க்ளின் (28). இவரது மோட்டார் சைக்கிளை திருடியதாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகநாதன் (21), முகம்மது வாசிம்கான் (20) ஆகியோரை பொன்மலை போலீசார் கைது செய்தனர்.

லாட்டரி சீட்டுகள் விற்பனை

* மலைக்கோட்டை பகுதியில் கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்த சீனிவாசபுரத்தை சேர்ந்த மதன்குமார் ( 33), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (46), திருச்சி இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த பெரியண்ணசாமி (29) ஆகியோரை கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கொலை மிரட்டல்

*அரியமங்கலம் எஸ்.ஐ.டி. கல்லூரி முதல்வர் விஜயகுமார் (57) அரியமங்கலம் போலீ்ஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எஸ்.ஐ.டி. கல்லூரி வளாகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கம்பி வேலியை பானி பூரி விற்பனை செய்து வரும் அரவான், அவரது மனைவி அபிராமி ஆகியோர் சேதப்படுத்தினர். இது தொடர்பாக கேட்டதற்கு மிரட்டியதோடு ஆபாசமான வார்த்தையால் திட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அதேபோல் நெடுஞ்சாலைத்துறை ரோந்து பணியாளர் மணிகண்டனும் அந்த தம்பதி மீது புகார் கொடுத்துள்ளார். இது குறித்து அரியமங்கலம் போலீசார் அரவான், அபிராமி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள் விற்றவர்கள் கைது

*வளநாடு அருகே உள்ள காப்புக்குடி பகுதியில் கள் இறக்கி விற்றதாக புதுக்கோட்டை மாவட்டம், கல்லம்பட்டியைச் சேர்ந்த ராமன் (45), தெற்கு சத்திரத்தைச் சேர்ந்த சிவன் (43) ஆகியோரை வளநாடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 273 லிட்டர் கள் அழிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்