வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டைக்கு செல்லும் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டைக்கு செல்லும் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனா்.

Update: 2022-10-03 18:45 GMT


செஞ்சி, 

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த கோட்டைகளில் செஞ்சிக்கோட்டையும் ஒன்று. மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோட்டை பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தையதாகும். தற்போதும் காண்போரை கவரும் வகையில் உள்ள செஞ்சிக்கோட்டைக்கு ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமீபத்தில் எடுத்துள்ள கணக்குப்படி இந்தியாவில் உள்ள சுற்றுலா பயணிகள் அதிகமாக கண்டறிந்த இடங்களில் 5-வது இடமாக செஞ்சிக்கோட்டை திகழ்கிறது.

புதர் மண்டிய சாலை

இவ்வளவு பெருமை வாய்ந்த செஞ்சி கோட்டைக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள கோடையின் நுழைவு வாயிலில் இருந்து கோட்டைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். கோட்டையின் உள்பகுதியில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் வரை செல்லும் பாதையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதோடு சாலையும் சேதமடைந்து காணப்படுகிறது.

சமீபத்தில் செஞ்சியை பார்வையிட வந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சி கோட்டைக்கு சாலை அமைத்து கொடுப்பதுடன் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தொல்லியல் துறையினரும் சாலை அமைக்க உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு காத்திருக்கின்றனர். எனவே அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொல்லியல் துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து செஞ்சியை சேர்ந்த வக்கீல் வைகை தமிழ்செல்வன் கூறும்போது நான் தினமும் செஞ்சி கோட்டைக்கு நடைப்பயிற்சி சென்று வருவது வழக்கம். மேலும் கோட்டையில் உள்ள வெங்கட்ரமணர் கோவிலுக்கும் சாமி தரிசனம் செய்ய செல்வேன். என்னை போல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இங்கு நடைப்பயிற்சிக்கு சென்று வருகிறார்கள். கோட்டையில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மாறி இருப்பதால் நடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. அதேபோல் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறாா்கள். சில நேரங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. இதை தொல்லியல் துறை கண்டு கொள்கிறதா? என்று தெரியவில்லை. எனவே சுற்றுலாபயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் மன வேதனையை உணர்ந்து கோட்டைக்கு செல்லும் சாலைகளை சீரமைத்து, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அமைச்சர் செஞ்சிமஸ்தான் இதற்காக முயற்சி எடுத்து சாலை அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

குடிநீர் வசதி

திருவண்ணாமலை மாவட்டம் அரங்கமங்கலத்தை சேர்ந்த பிரபாகரன் கூறும்போது, நான் குடும்பத்துடன் அடிக்கடி செஞ்சிக்கோட்டையை பார்வையிட வருவது வழக்கம். இது எனக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வாக உள்ளது. இருந்தாலும் கோட்டையின் பகுதியில் சில அடிப்படை வசதிகளை கூடுதலாக செய்து கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். கோட்டையின் உள் பகுதியில் நுழையும் போதே சாலைகள் சேதம் அடைந்து மேடு, பள்ளமாக படு மோசமாக இருக்கிறது. இந்த சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் கோட்டையின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் குடிநீர், சாலை, நிழற்குடை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். மேலும் டிக்கட் எடுக்க ஆன்லைன் புக்கிங்கை தவிர்த்து பணம் பெற்று டிக்கட் எடுக்கும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்