ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: உரிய ஆவணம் இல்லாத ரூ.5½ லட்சம் பறிமுதல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்றதாக ரூ.5½ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-02-07 22:10 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்றதாக ரூ.5½ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரூ.2 லட்சம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழுக்கள், 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோட்டில் கடந்த 20-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 15 பேரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக ரூ.16 லட்சத்து 97 ஆயிரத்து 840 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நிலை கண்காணிப்பு குழுவினர் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகவந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த காரில் ரூ.2 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காரில் வந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த நவநீதன் (வயது 35) என்பதும், ஒப்பந்ததாரரான அவர்உரிய ஆவணம் இல்லாமல் பணத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தறிப்பட்டறை உரிமையாளர்

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் ரூ.3 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீராம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (41) என்பதும், ஈரோட்டில் சொந்தமாக தறிப்பட்டறை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக ரூ.3 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.

இதேபோல் நேற்று காலை நிலை கண்காணிப்பு குழுவினர் பி.பி.அக்ரஹாரம் பவானிரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்கள். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் விஜய்ரித்திக் (30) என்பதும், சிவில் என்ஜினீயரான அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.64 ஆயிரத்து 500 கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணத்தை உரிய ஆவணங்களை காண்பித்து கருவூலத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்