பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகையை யொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Update: 2022-07-10 17:12 GMT


ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகையை யொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கட்டளை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகத்திருநாள் என்னும் பக்ரீத் ஹஜ்ெபருநாளை முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடினர். ஆதிநபி இப்ராகிம் இறைவனின் கட்டளைப்படி அவரது மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக அறுத்து பலிகொடுக்க முன்வந்தார். அவரின் தியாகத்தை ஏற்றுக்கொண்ட இறைவன் ஒரு ஆட்டினை அறுத்து பலியிட்டு அதன் இறைச்சியை உறவினர்கள் மற்றும் ஏழைகளுக்கு வழங்குமாறு கட்டளையிட்டார்.

இப்ராகிம்நபியின் இந்த தியாகத்தினை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருவதுடன் குர்பானி கொடுத்து வருகின்றனர்.

மேலும், ஹஜ் பெருநாளையொட்டி நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு மெக்கா சென்றுள்ளனர். பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று காலை ராமநாதபுரம் ஈதுகா கோரிதோப்பு மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்த தொழுகைக்காக ராமநாதபுரம் மதுரை ரோட்டில் உள்ள ஈதுகா மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

இந்த தொழுகையில் ராமநாதபுரம் நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லலிம்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகையின் முடிவில் உலக அமைதிக்காகவும், கொரோனா உள்ளிட்ட நோய் தொற்றில் இருந்து மக்களை காக்கவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகையையொட்டி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் புத்தாடை அணிந்து வந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதேபோல ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் மற்றும் பாரதி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மகிழ்ச்சி

மாவட்டம் முழுவதும் 262 இடங்களில் பக்ரீத் பண்டிகையை யொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிறப்பு தொழுகையின் முடிவில் மாவட்டம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து இறைவனின் கட்டளைப் படி குர்பானி கொடுத்து அதன் இறைச்சியை ஏழைகள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு பங்காக வழங்கியதோடு, ஒரு பங்கினை தாங்களும் சமைத்து சாப்பிட்டு தியாகத்திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்