அ.தி.மு.க.வினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 70 பேர் மீது வழக்கு

திருவொற்றியூர் தேரடியில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 70 பேர் மீது வழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-03-15 04:19 GMT

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது அ.ம.மு.க. பிரமுகரை தாக்கியதாகவும், அவரது செல்போனை பறித்துக் கொண்டதாகவும் கூறி மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திருவொற்றியூர் தேரடியில் முன்னாள் எம்.எல்.ஏ.கே. குப்பன் தலைமையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது, வண்ணாரப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் இருதயம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அ.தி.மு.க.வினர் தமிழக அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அ.தி.மு.க.வினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி கே.குப்பன் உள்பட 69 அ.தி.மு.க.வினர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்