அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

Update: 2022-06-12 23:42 GMT

சென்னை,

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று 10 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தி.மு.க. அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஜே.சி.டி.பிரபாகர் உள்பட 12 பேர் அடங்கிய குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளனர்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை

இதுதொடர்பாக அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டம் தொடர்பாக கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனை கூட்டம் வருகிற 14-ந்தேதி (நாளை) காலை 10.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தில் அ.தி. மு.க. தலைமை நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்