திருத்தணி முருகன் கோவில் படிகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

திருத்தணி முருகன் கோவிலில் படிகள் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விரைந்து முடிக்க பக்தர்கள் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-07 13:04 GMT

படிகள் அமைக்கும் பணி

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்வது திருத்தணி முருகன் கோவில். இந்த கோவிலில் உள்ள 9 நிலை கிழக்கு ராஜகோபுரம் கட்டும் பணிகள் நிறைவடைந்து 1½ ஆண்டுக்கு மேல் ஆனது. ஆனால் கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து மாடவீதியை இணைக்கும் 56 படிகள் அமைக்கப்படாமல், பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ராஜகோபுரத்தையும், மாடவீதியையும் இணைக்கும் வகையில் ரூ.92 லட்சம் செலவில் 56 படிகள் அமைக்கும் பணியை கடந்த மார்ச் மாதத்தில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதனையடுத்து தொடர்ந்து 2 மாதங்கள் ராஜகோபுரத்தையும், மாடவீதியையும் இணைக்கும் படி பாதைகளை மண் நிரப்பி சமன் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

தொடங்காத பணிகள்

பின்னர் அடுத்தக்கட்டமாக படிகள் அமைக்கும் பணி தொடங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதத்தில் ஆடி கிருத்திகை விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெறாமல் இருப்பதை குறித்து அதிகாரிகளை கண்டித்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோவில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். 3 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பக்தர்கள் கோரிக்கை

ஆனால் தற்போது வரை ராஜகோபுரத்தையும், மாடவீதியையும் இணைக்கும் படிகள் அமைக்கும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. மேலும் படிகள் அமைக்க சமன் செய்து வைத்துள்ள மண் மழையால் சரிந்தும், அடித்து செல்லப்படுகிறது. எனவே முருகன் கோவில் படிகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க இந்து அறநிலைத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்