அண்ணன்-தங்கையை கத்தியை காட்டி மிரட்டி நகை, செல்போன் பறித்த 4 பேர் சிக்கினர்

அண்ணன்-தங்கையை கத்தியை காட்டி மிரட்டி நகை, செல்போன் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-17 20:44 GMT


அண்ணன்-தங்கையை கத்தியை காட்டி மிரட்டி நகை, செல்போன் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நகை, செல்போன் பறிப்பு

மதுரை சீமான் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் பாண்டிராதா (வயது 21). சம்பவத்தன்று இரவு இவர் தனது சகோதரர் நல்லமணிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பக்கத்து தெருவுக்கு நடந்து சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். சீமான் நகர் அம்மன்கோவில் தெரு சந்திப்பில் வந்த போது திடீரென்று 4 பேர் கும்பல் அங்கு வந்தனர்.

அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாண்டிராதா அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனே அவர் சத்தம் போட்டார். அதை கேட்டு அவரது சகோதரர் நல்லமணி விரைந்து வந்தார். ஆனாலும் அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பாண்டிராதாவிடமிருந்து தங்க சங்கிலி, நல்லமணியிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி விட்டது. இது குறித்து அவர்கள் மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

4 பேர் கைது

மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் உத்தரவிட்டார். அதன்பேரில் வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனையின் பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் சீமான் நகர் பாரதிபுரம் ராஜபாண்டி (25), நவீன்குமார் (20), முத்துப்பாண்டி (23), விஸ்வா (20) ஆகிய 4 பேர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நகை, செல்போனை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது நகரில் பல போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்