நாட்டில் தற்போது நிலவும் சர்வாதிகாரத்திற்கு வாரிசு அரசியல் பரவாயில்லை ராகுல்காந்தியை பாராட்டி சிவசேனா கருத்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரையை தொடங்கி உள்ளார்.

Update: 2022-09-13 19:24 GMT

மும்பை, 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரையை தொடங்கி உள்ளார். ராகுல்காந்தியின் இந்த யாத்திரையை பாராட்டி நேற்று சிவசேனாவின் 'சாம்னா' பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-

ராகுல்காந்தியின் யாத்திரைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. வேலையில்லாத திண்டாட்டம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு தொழில் பிரச்சினைகள் குறித்து அவர் கேள்வி எழுப்புகிறார்.

அவரின் கேள்வி பா.ஜனதாவின் வாயை மூடவைத்து உள்ளது.

ராகுல்காந்தியின் யாத்திரை மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது பா.ஜனதாவுக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஏகாதிபத்தியம், சர்வாதிகாரம் நாட்டை அழித்து கொண்டு இருக்கிறது. இதற்கு வாரிசு ஆட்சி பரவாயில்லை என தோன்றுகிறது. ராகுல் காந்தியின் யாத்திரை நாட்டில் நிலவும் வெறுப்புணர்வு சூழலை சரிசெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவசேனா ஒரு காலத்தில் காங்கிரஸ், அதன் தலைமையை கடுமையாக விமர்சித்த கட்சி ஆகும். சமீப காலமாக அந்த கட்சி ராகுல்காந்தியை பாராட்டி வருகிறது. அதேநேரத்தில் குடும்ப உறுப்பினர்களை கட்சியில் முன்னிலைபடுத்துவதற்காக சிவசேனாவும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்