இந்தியாவில் ரூ.2,236 கோடி மதிப்பிலான எல்லை சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள் - ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

நாடு முழுவதும் ரூ.2,236 கோடி மதிப்பிலான எல்லை சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார்.

Update: 2024-10-12 09:02 GMT

கொல்கத்தா,

இந்தியாவில் எல்லை சாலைகள் அமைப்பு(பி.ஆர்.ஓ.) சார்பில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 75 சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார். மேற்கு வங்காள மாநிலம் சுக்னா பகுதியில் உள்ள ராணுவ படைத்தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் இந்த திட்டங்களை அவர் தொடங்கி வைத்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர், அருணாசல பிரதேசம், லடாக், உத்தரகாண்ட், சிக்கிம், இமாசல பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், நாகாலாந்து, மிசோரம் மற்றும் அந்தமான் தீவுகளில் 22 சாலைகள், 51 பாலங்கள் உள்ளிட்ட 75 சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியின் வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற லட்சியம் நிறைவேறுவதை இந்த திட்டங்கள் உறுதி செய்யும் என்றார். மேலும் எல்லைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், அங்குள்ள சமூக-பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்