தேர்தல் பணிகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நாளை மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை

தொகுதி வாரியாக தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-09 14:23 GMT

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார். முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் 'வார் ரூம்', தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு, நேர்காணல் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மக்களவை தேர்தல் பணிகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டெல்லியில் நாளை மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்த உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"வரவிருக்கும் மக்களவை தேர்தல் தொடர்பாக 'இந்தியா' கூட்டணி சில முடிவுகளை எடுத்துள்ளது. டெல்லியில் நாளை காங்கிரஸ் கட்சியின் பல்வேறு குழு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. பல்வேறு பிரிவுகளுக்கு பொறுப்புகளை வழங்க உள்ளோம்.

தேர்தலை முன்னிட்டு தொகுதி வாரியாக 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை நியமித்துள்ளோம். மாவட்ட வாரியாகவும் தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளோம்."

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்