பா.ஜனதாவில் இணைகிறாரா சம்பாய் சோரன்? 6 எம்.எல்.ஏ.,க்களுடன் டெல்லியில் முகாம்

முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததால், சம்பாய் சோரன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

Update: 2024-08-18 09:48 GMT

புதுடெல்லி,

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரன் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து கடந்த ஜூலையில் முதல்-மந்திரி பதவியில் இருந்து சம்பாய் சோரன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். தனது பதவியை ராஜினாமா செய்ததால் சம்பாய் சோரன் கடந்த சில நாட்களாக அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏக்.களுடன் சம்பாய் சோரன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும், விரைவில் அவர் பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய தனிப்பட்ட வேலைகளுக்காக இங்கு வந்துள்ளேன்.

நான் யாரையும் சந்திக்கவில்லை. வதந்திகள் பரப்பப்படுவது குறித்து எதுவும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சம்பாய் சோரன் திடீரென டெல்லிக்கு சென்றிருப்பது இந்தியா கூட்டணியினரிடையே பல்வேறு விவாதங்களை எழச் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்