மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-03 08:37 GMT

டெல்லி,

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநிலத்திற்கு புதிய மதுபான கொள்கை கொண்டுவந்தது. தனியார் மதுபான நிறுவனங்களுக்கு ஆதரவாக மதுபான கொள்கைகள் கொண்டுவரப்பட்டதாகவும், தனியார் நிறுவனங்கள் டெல்லியில் மதுபான கடைகள் அமைக்க, உரிமம் வழங்க ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதிலும் குறிப்பாக டெல்லியில் மதுபான கடைகள் அமைக்க உரிமம் பெற சவுத் குரூப் என்ற நிறுவனம் ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறையினர் பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சவுத் குரூப் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகளான எம்.எல்.ஏ. கவிதா செயல்பட்டு வருகிறார்.

இதையடுத்து, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. கவிதாவை கடந்த மார்ச் 15ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட கவிதாவை சிபிஐ அதிகாரிகளும் கைது செய்தனர். அதேவேளை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி அமலாக்கத்துறை எற்கனவே கைது செய்துள்ளது. மணீஷ் சிசோடியாவும், கவிதாவும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி அவ்வப்போது கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட பணமோசடி வழக்கில் கவிதா மற்றும் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, திகார் சிறையில் இருந்தவாறு இருவரும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, பணமோசடி வழக்கில் கவிதா மற்றும் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்