பச்சிளம் குழந்தையை பாலிதீன் பையில் வைத்து வீசிய கொடூர தாய்

பச்சிளம் குழந்தையை பாலிதீன் பையில் வைத்து வீசிய கொடூர தாய் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

Update: 2022-08-25 16:26 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாப்புரா தாலுகா நெரசா கவுலிவாடா கிராமத்தையொட்டிய சாலையோரம் ஒரு மரத்தில் பெரிய பாலிதீன் பை தொங்கிக் கொண்டு இருந்தது. அந்த பையில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆஷா ஊழியரான சத்தியவதி தேசாய்க்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது அந்த பையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இருந்தது. அந்த குழந்தையின் கண் பகுதியில் காயம் ஏற்பட்டு இருந்தது.

மேலும் மழையில் நனைந்ததால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. யாரோ கல் நெஞ்சம் கொண்ட தாய், பச்சிளம் குழந்தையை பாலிதீன் பையில் வைத்து மரத்தில் தொங்கவிட்டு சென்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தை கானாப்புரா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது. அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கானாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசிச்சென்ற கொடூர தாயை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்