வியாபாரியை கொன்ற உறவினர் உள்பட 4 பேர் கைது

வியாபாரியை கொன்ற உறவினர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

Update: 2022-11-28 21:04 GMT

கலபுரகி:-

கலபுரகி மாவட்டம் சேடம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜூன். இவர், எலெக்ட்ரிக் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வந்தார். இவரது மகன் சீனிவாஸ். இவர், வேறு சாதி பெண்ணான ஸ்வேதாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி கடையின் அருகே கழுத்தை நெரித்தும், மர்ம உறுப்பில் தாக்கியும் மல்லிகார்ஜூனை மர்மநபர்கள் கொலை செய்திருந்தனர். இதுகுறித்து சேடம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், மல்லிகார்ஜூனை கொலை செய்ததாக அவரது மருமகள் ஸ்வேதாவின் சகோதரர் லிங்கராஜ், கூலிப்படையை சேர்ந்த அவினாஷ், விஜய், கிரண் ஆகிய 4 பேரையும் சேடம் போலீசார் கைது செய்தனர்.

சீனிவாஸ், வேறு சாதியை சேர்ந்த ஸ்வேதாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். இதற்கு ஸ்வேதாவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால், தனது பெற்றோருடன் திருமணத்திற்கு பின்பு பேசாமல் இருந்தார். இதற்கிடையில், ஸ்வேதாவிடம் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி மல்லிகார்ஜூன் கூறியுள்ளார். ஏற்கனவே ஸ்வேதா வேறு சாதியை சேர்ந்த சீனிவாசை திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் இருந்த சகோதரர் லிங்கராஜ், வரதட்சணையும் கேட்டதால் மல்லிகாாஜூனை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக கூலிப்படைக்கு ரூ.5 லட்சம் கொடுத்து மல்லிகார்ஜூனை லிங்கராஜ் தீர்த்து கட்டியது தெரியவந்தது. கைதான 4 பேர் மீதும் சேடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்