பாஜக ஆட்சியில் 10 கோடி போலி பயனாளிகளை நீக்கி உள்ளோம்.. பிரதமர் மோடி பேச்சு

பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சியில் ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2023-11-09 11:06 GMT

சட்னா:

மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 17ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. சட்னாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

என்னுடைய அரசு ஏழை மக்களுக்காக 4 கோடி கான்கிரீட் வீடுகளை கட்டியுள்ளது. ஆனால், எனக்காக ஒரு வீடுகூட கட்டவில்லை. உங்களுடைய ஒரு வாக்கு, பா.ஜனதா மீண்டும் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உதவும். உங்களுடைய வாக்கு டெல்லியில் மோடியை வலுப்படுத்துவதுடன், மத்திய பிரதேசத்தில் இருந்து ஊழல் காங்கிரசை பல மைல் தூரத்திற்கு விரட்டவும் உதவும். இதன் அர்த்தம் என்னவெனில், ஒரே வாக்கில் மூன்று அதிசயங்கள். இது மூன்று சக்திகளை போன்றது.

அரசு திட்டத்தின் மூலம் பயனடைய காங்கிரஸ் கட்சியால் சேர்க்கப்பட்ட 10 கோடி போலி பயனாளிகள், நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரசு 2.75 லட்சம் கோடி ரூபாயை சேமித்துள்ளது. அரசின் நடவடிக்கைகளால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது என்னை வசைபாடுகிறார்கள்.

இப்போது நான் எங்கு சென்றாலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது பற்றியே பேசப்படுகிறது. நாடு முழுவதும் மகிழ்ச்சி அலை வீசுகிறது. நாம் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டியுள்ளோம். 30 ஆயிரம் பஞ்சாயத்து கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.

பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் மத்தியப் பிரதேசமும் ஒன்று என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சட்னாவில் மட்டும் ஏழை மக்கள் 1.32 லட்சம் வீடுகளை பெற்றுள்ளனர்.

கொரோனா பாதிப்பின்போது தொடங்கப்பட்ட ஏழைகளுக்கான இலவச ரேஷன் திட்டத்தை வரும் டிசம்பருக்கு பிறகு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க உள்ளோம்.

இவ்வாறு மோடி பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்