கும்பகோணம் பகவத் விநாயகர் கோவில்

ஜாதகத்தில் தோஷம் உள்ளவர் பகவத் விநாயகரை பூஜித்து வலம் வந்தால் நவக்கிரக தோஷம் நீங்கும்.

Update: 2024-09-05 12:11 GMT

கும்பகோணம் மடத்துத் தெருவில் அமைந்துள்ளது பகவத் விநாயகர் கோவில். இந்த விநாயகர் ஆரம்ப காலத்தில் இக்கோவிலுக்கு அருகில் ஓடும் காவிரி நதிக்கரையில் ஓர் அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் வேதாரண்யம் திருத்தலத்தில் பகவத் முனிவர் என்பவர் தன் சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். இவரின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் தன் மகனிடம், "நான் இறந்ததும் என்னை தகனம் செய்த பின் அந்த அஸ்தியை ஒரு கலசத்தில் சேகரித்துப் புனிதத் திருத்தலங்களில் ஓடும் நதிக்கரைக்கு எடுத்துச்செல். எங்கு என்னுடைய அஸ்தி பூக்களாக மலர்கிறதோ அங்கு ஓடும் புனித நதியில் முறைப்படி கரைத்து விடு' என்று சொல்லி விட்டு உயிர்துறந்தார்.

அன்னை சொன்னதுபோல், தன் தாயாரின் அஸ்தியை ஒரு மண் கலசத்தில் சேகரித்து ஓர் ஓலைக் கூடைக்குள் பத்திரப் படுத்தி துணியால் மண் கலசத்தின் வாய்ப்பகுதியை மூடி, மூட்டையாகக் கட்டினார். பகவத் முனிவர், தன் சீடர்களில் ஒருவனை அழைத்துக்கொண்டு பயணமானார்.

'புனிதத்திருத்தலமான காசியில் ஓடும் கங்கைக் கரையில் தான் தன் அன்னையின் அஸ்தி, பூக்களாக மலரும்' என்ற எண்ணத்தில் பயணத்தைத் தொடர்ந்தவர். வழியில் கும்பகோணம் தலத்திற்கு வந்ததும், அங்கு ஓடும் காவிரியில் நீராட விரும்பினார். தன் தாயின் அஸ்தி உள்ள கலசக் கூடையை, அங்கு அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பிள்ளையார் முன்பு வைத்தவர். தன் சீடனைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, காவிரியில் நீராட சென்றார்.

குருநாதர், காவிரியில் நீராடிக் கொண்டிருக்கும்போது, சீடனுக்குப் பசி எடுக்கவே, 'கூடையில் உள்ள மண்பாண்டத்தில் ஏதாவது பலகாரங்கள் இருக்கும்' என்று எண்ணியவன், அஸ்தியுள்ள மண்பாண்டமான கலசத்தைத் திறந்து பார்த்தான். மண் கலசத்திற்குள் பூக்கள் நிறைந்திருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தவன், மறுபடியும் முன்பு உள்ளது போல் மூட்டையைக்கட்டி பத்திரப்படுத்திவிட்டு, குருநாதருக்காகக் காத்திருந்தான். நீராடிவிட்டு வந்த பகவத் முனிவர், விநாயகருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

சில நாட்களில் காசியை அடைந்த முனிவர், கங்கையில் நீராடி விட்டு, அஸ்தி கலசத்திற்குப் பூஜை செய்தபின், திறந்து பார்த்தார். அந்த மண் கலசத்திற்குள் எலும்பு மற்றும் சாம்பல் அப்படியே இருந்ததால் என்ன செய்வதென்று யோசித்தார். அப்போது, பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சீடன் இந்த நிகழ்வுகளை அதிசயத்துடன் பார்த்தான்' கும்பகோணத்தில் இந்தக் கலசத்திற்குள் இருந்த மலர்கள். இங்கே எப்படி அஸ்தியாக மாறியிருந்தது!" என்று குழம்பினான். பகவத் முனிவர் தனக்குள், "அஸ்தி மலர்களாக மாறும் என்று நினைத்தேன். அப்படியே இருக்கிறதே" என்று முணு முணுத்தார்.

முனிவரின் நிலையை அறிந்த சீடன். "குருவே, என்னை மன்னித்து விடுங்கள். இது அஸ்தி கலசம் என்று எனக்குத் தெரியாது. தாங்கள் கும்பகோணத்தில் காவிரியில் நீராடும் போது எனக்குப் பசி எடுக்கவே, மண் கலசத்திற்குள் ஏதாவது பலகாரங்கள் இருக்கும் என்று கலசத்தை மெதுவாக திறந்து பார்த்தேன். அப்போது இந்தக் கலசத்திற்குள் பூக்கள் மலர்ந்து நிறைந்திருந்தன. இப்பொழுது, எலும்பும் சாம்பலுமாக அஸ்தி நிறைந் திருக்கிறதே. அது எப்படி என்று தெரியவில்லை?" என்றான் பயத்துடன். இதை ஏன் அங்கேயே கூறவில்லை?" என்று கோபித்துக்கொண்ட முனிவர். மீண்டும் கும்பகோணம் நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.

கும்பகோணம் வந்தடைந்ததும், முன்பு நீராடிய காவிரிக் கரைக்கு வந்து, காவிரியில் நீராடி, அங்கு அரச மரத்தடியில் எழுந்தருளியிருந்த விநாயகர் முன், அஸ்திக் கல்சத்தை வைத்துப் பூஜித்து விநாயகரை வேண்டினார். பிறகு, பயபக்தியுடன் கலசத்தைத் திறந்து பார்க்க, அதிலிருந்த அஸ்தி, பூக்களாக மலர்ந்திருந்தது கண்டு மகிழ்ந்தார்.

உடனே, தன் அன்னைக்குச் செய்ய வேண்டிய பிதுர்காரியங்களை காவிரிக்கரையில் செய்தார். மலர்களாக மாறியிருந்த அஸ்தியை காவிரியில் கரையச் செய்து மறுபடியும் வழிபாடு செய்தார் முனிவர். இதனால்தான் காசியைவிட மிக உயர்ந்தது கும்பகோணம் திருத்தலம் என்று பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

அஸ்தியானது பூக்களாக மாறிய காவிரிக்கரையே 'பகவத் படித்துறை' (பகவத் தீர்த்தம்) என்றும் முனிவர் வழிபட்ட விநாயகர், பகவத் விநாயகர் என்றும் போற்றப்படுகிறது. அரச மரத்தடியிலிருந்த விநாயகருக்கு, அங்கு வசிக்கும் பக்தர்கள் உதவியுடன் காவிரிக் கரைக்கு அருகில் ஒரு கோவில் கட்டினார். அதுதான் இன்று மடத்துத் தெருவில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோவில் ஆகும்.

கும்பகோணம் மடத்துத் தெருவில் கிழக்கு திசை நோக்கி உள்ள இக்கோவில் ஆரம்ப காலத்தில் காவிரிப் படித்துறைக்கு அருகிலேயே இருந்தது. கால ஓட்டத்தில் காவிரி நதி குறுகிவிட்டதால் தற்போது இக்கோவில் தனியாகவும், பகவத் படித்துறை தனியாகவும் உள்ளது.

'இந்த ஸ்ரீபகவத் விநாயகர், நவக்கிரகங்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளார்' என்று தல புராணம் கூறுகிறது. இவர், சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபியிலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ் கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ் கையிலும் சனியை வலது மேல்கையிலும், ராகுவை இடது மேல்கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு அருள்புரிகிறார்.

ஜாதகத்தில் தோஷம் உள்ளவர் இந்த விநாயகரை பூஜித்து வலம் வந்தால் நவக்கிரக தோஷம் நீங்கும். மேலும், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையும் போக்கி அருள்புரிவார் என்பது ஐதீகம்.

மிகவும் பழமையான கோவிலான இந்த ஆலயம் இன்று பலவித மாற்றங்கள் கொண்டு புதுமையாகத் திகழ்கிறது. இத்திருக்கோவிலில் பகவத் முனிவருக்கு சிலை உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்