மாரி செல்வராஜ் யார் என்பதை 'வாழை' படம் எடுத்து காட்டும் - சிவகார்த்திகேயன்

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம் விருதுகளை வாங்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Update: 2024-08-20 19:20 GMT

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாழை'. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வீடியோ மூலம் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

அதில் சிவகார்த்திகேயன் கூறியதாவது:-

'வாழை' திரைப்படம் செல்வராஜ் வாழ்க்கையில் நடந்ததை சினிமா மூலம் பதிவிட்டுள்ளார். வாழ்க்கையில் நடந்த விஷயம் என்பதால் ஒரு சந்தோஷமான விஷயத்தை தாண்டி அவர் வாழ்க்கையில் நடந்த மிக பெரிய நிகழ்வை இப்படத்தில் காட்டியுள்ளார். எளிய மக்களின் வலி, வேதனை, கண்ணீர், சந்தோஷம், சிரிப்புகளை அவர்கள் வாழ்க்கையை பதிவு செய்யும் போது அந்த சினிமா ரொம்ப அழகாக இருக்கிறது. அதைபோல் 'வாழை' திரைப்படத்திலும் மாரி செல்வராஜ் அவர் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான தருணங்கள் மற்றும் மிக முக்கியமான நிகழ்வுகளை இப்படத்தில் கூறியுள்ளார்.

இப்படத்தை பார்க்கும் போது நமக்கு நெருக்கமான ஒருவரிடம் அவர்களில் கதை கேட்கும் போது என்ன உணர்வு வருமோ, அந்த உணர்வு தான் 'வாழை' திரைப்படம். இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள், இசை, எல்லாம் நமக்கு நெருக்கமான ஒரு உணர்வு தருகின்றன. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இது ஒரு உண்மை கதை என்பதால் அதிகமாக உழைத்துள்ளார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

மாரி செல்வராஜ் மீண்டும் ஒருமுறை பெரிய திரையில் அவருடைய அனுபவத்தை மட்டுமல்ல வலிமையான இயக்குநர் என்பதையும் இப்படத்தில் நிரூபித்துள்ளார். அவருடைய கடந்த இரண்டு படமும் கமர்சியல் படமாக இருந்துள்ளது. இப்படம் முழுக்க முழுக்க வாழ்வியலை மட்டுமே சார்ந்த படமாகியுள்ளது என மாரி செல்வராஜ் அவர்களே கூறியுள்ளார். எனக்கு பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு ரொம்ப பிடித்த படமாக 'வாழை' அமைந்துள்ளது. இப்படம் விருதுகளை வாங்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்