'வேட்டையன்' படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் ரித்திகா சிங்

‘வேட்டையன்’ படத்தில் ரித்திகா சிங்கின் கதாபாத்திர போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Update: 2024-09-16 15:25 GMT

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, திருநெல்வேலி, மும்பை, சென்னை என பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஆண்டு ரஜினி பிறந்த நாளன்று டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் வெளியாகி வைரலானது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

மேலும் இசை வெளியீட்டு விழா வருகிற 20ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதனிடையே டப்பிங் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரஜினிகாந்த், பகத் பாசில் என படக்குழுவினர் அடுத்தடுத்து டப்பிங் பணிகளை தொடங்கினர்.

இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி ரித்திகா சிங்கின் கதாபாத்திர போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ரூபா என்ற போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார். மேலும் இது தொடர்பாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

இறுதிச்சுற்று மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங், கடைசியாகத் தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அதே விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்