மாரி செல்வராஜை புகழ்ந்து பேசிய இயக்குனர் மணிரத்னம்

இயக்குனர் மணிரத்னம் 'வாழை' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் மாரி செல்வராஜை புகழ்ந்து பேசியுள்ளார்.

Update: 2024-08-20 08:36 GMT

சென்னை,

'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களை இயக்கி பாராட்டை பெற்றார். அதனைத்தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'வாழை'.

இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில், 'வாழை' படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றன. வரும் 23-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளநிலையில், தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற வாழை படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் வீடியோ மூலம் இயக்குனர் மணிரத்னம் பேசியுள்ளார்.

அதில் மாரி செல்வராஜ் ஒரு சிறந்த இயக்குனர். தமிழ் திரையுலகில் வலிமையான குரலாக விளங்குகிறார். மற்ற படங்களை போலவே இந்த படத்திலும் எல்லா துறைகளையும் சிறப்பாக கையாண்டுள்ளார். உங்களை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. ஒரு கிராம கதையில் எப்படி எல்லாரையும் இவ்வளவு நல்ல நடிக்க வைக்க முடியும், உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கிறது. இது ஒரு தனி திறமை. இந்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துகள் என்று பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்