வங்கக்கடலில் இன்று உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-08-29 00:46 GMT

கோப்புப்படம்

சென்னை,

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையோர பகுதியை வருகிற 31-ந்தேதி நெருங்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இருந்தபோதும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 3-ந்தேதி வரை அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதேபோல மத்திய, தெற்கு, வடக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல், வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்