மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய வீராங்கனை நியமனம்
உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனான அலிசா ஹீலி இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார்.;
image courtesy: AFP
மும்பை,
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 14-ம் தேதி தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்நிலையில் எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் உ.பி.வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனை அலிசா ஹீலி இருந்தார். ஹீலி இந்த சீசனில் காயம் காரணமாக விலகியுள்ளார். அதன் காரணமாக தீப்தி சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.