கோலி, பும்ரா இல்லை.. எங்கள் அணியில் அந்த இந்திய வீரர் இருந்தால் நன்றாக இருக்கும் - ஹெட், மார்ஷ்

ஹெட் மற்றும் மார்ஷ் இருவரும் இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் தங்களது அணியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளனர்.

Update: 2024-09-26 08:11 GMT

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இம்முறை 5 போட்டிகள் கொண்ட தொடராக இது நடைபெற உள்ளது.

கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சூழலில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் தங்களது அணியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளனர்.

இது குறித்து மிட்சல் மார்ஷ் பேசுகையில், "ரிஷப் பண்ட் ஒரு ஆஸ்திரேலியா வீரராக இருக்கலாம் என்று விரும்புகிறேன். ஏனென்றால் அவர் கடந்த சில ஆண்டில் நிறைய விஷயங்களை அனுபவித்தார். அவர் நரகத்திலிருந்து மீண்டு வந்தார். அவர் பாசிட்டிவான பையனாகவும் இன்னும் இளமையானவராகவும் இருக்கிறார். அவருக்கு எப்பொழுதும் வெற்றி பெற வேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கிறது. ரிஷப் பண்ட் மிகவும் போட்டித் தன்மை வாய்ந்தவர். எப்பொழுதும் சிரித்துக் கொண்டே நிதானமாக இருக்கும் ஆளுமை அவருக்கு வாய்த்திருக்கிறது" என கூறினார்.

இது குறித்து டிராவிஸ் ஹெட் கூறும் பொழுது "அதிகமாக ஆஸ்திரேலிய வீரர் போல இருக்கும் வீரராக நான் ரிஷப் பண்ட்டை உணர்கிறேன். அவர் ஆக்ரோஷத்தன்மையுடன் இருப்பது அதே வழியில் தொடர்ந்து சென்று விளையாடுவது என அவருக்கு எதிராக விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன்"என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்