இதை செய்தால் பும்ரா சிறந்த பவுலராக தனது கெரியரை முடிக்கலாம் - இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ்

அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளராக பும்ரா சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக ஜாகீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-24 10:17 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்வதாக பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசும் அவர் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து வருகிறார்.

குறிப்பாக அழுத்தமான சூழ்நிலையில் துல்லியமான யார்கர் பந்தை வீசும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வருகிறார்.

டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வெறும் 4.17 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார்.

அதன் காரணமாக தற்சமயத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா தான் தமக்கு மிகவும் பிடித்த பவுலர் என்று எம்எஸ் தோனி பாராட்டியிருந்தார். அதே போல பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது நடந்து முடிந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினர்.

இந்நிலையில் தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக செயல்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா தம்முடைய உடலை கவனித்து தொடர்ந்து பிட்டாக விளையாட வேண்டும் ஜாகீர் கான் ஆலோசனை தெரிவித்துள்ளார். அதை செய்தால் கபில் தேவ் மற்றும் தம்மைப் போன்றவர்களை முந்தி அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளராக பும்ரா சாதனை படைக்க வாய்ப்புள்ளதாகவும் ஜாகீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"இது பெரிய சாதனை. ஆனால் இந்த பவுலர் இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது. அவர் அந்த சாதனையை தொடர்ந்து துரத்துவார். ஏனெனில் பும்ரா போன்றவரை நீங்கள் உலகின் நம்பர் 1 பவுலர் என்று சொல்வதற்கு தயங்கமாட்டீர்கள். இந்த நேரத்தில் அவர் தன்னுடைய உடலைப் பற்றி தெரிந்து வைத்திருப்பார் என்று நம்புகிறேன். அதை வைத்து அவர் பிட்டாக இருந்து தொடர்ந்து காயங்களை தவிர்த்து முன்னோக்கி விளையாட வேண்டும். அதைச் செய்தால் அவர் இந்த சாதனைகளை தாண்டுவார். ஏனெனில் அவர் நிறைய போட்டிகளில் விளையாடுகிறார்.

பொதுவாக ஒரு தரமான பவுலர் பிட்ச், கால சூழ்நிலைகளைப் பற்றி சிந்திக்க மாட்டார். ஸ்விங், வேகம், மெதுவான பந்துகள், யார்க்கர் போன்றவற்றை உங்களுடைய அனுபவத்தின் அங்கமாக பயன்படுத்த முடியும். உங்களிடம் திறமை இருக்கும்போது நீங்கள் சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இல்லையே என்று சிந்திக்க மாட்டீர்கள். மாறாக இருக்கும் சூழ்நிலைகளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அசத்துவீர்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்