13-வது ஓவர் வரை நன்றாக விளையாடினோம் என்று நினைத்தேன், ஆனால்... - ரஹானே பேட்டி
18-வது ஐ.பி.எல். தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.;

Image Courtesy: @IPL
கொல்கத்தா,
18-வது ஐ.பி.எல். தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மே 25-ந் தேதி வரை 13 இடங்களில் அரங்கேறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.
கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 56 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் குருணல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 59 ரன்களும், பில் சால்ட் 56 ரன்களும் அடித்தனர். பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் குருனால் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் கொல்கத்தா கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில் கூறியதாவது, நாங்கள் பேட்டிங் செய்த சமயத்தில் 13வது ஓவர் வரை நன்றாக விளையாடினோம் என்று நினைத்தேன், ஆனால் அதன்பின் அடுத்தடுத்து 2-3 விக்கெட்டுகள் வீழ்ந்ததன் காரணமாக ஆட்டத்தின் வேகத்தை அது மாற்றியது.
அடுத்து வந்த பேட்டர்கள் தங்களால் இயன்றதைச் செய்தார்கள். ஆனால், அது போதுமானதாக இல்லை. நானும் வெங்கடேஷ் ஐயரும் பேட்டிங் செய்யும்போது 200-210 ரன்களை எட்ட முடியும் என்று பேசினோம். ஆனால், அச்சமயத்தில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸின் போது ஆட்டத்தில் கொஞ்சம் பனியின் தாக்கம் இருந்தது.
ஆனால், அவர்கள் பேட்டிங்கில் மிகச் சிறந்த பவர்பிளேயைக் கொண்டிருந்தனர். அது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக ரன்களை கொடுத்திருந்தோம். இந்த ஆட்டத்தைப் பற்றி நாங்கள் அதிகம் யோசிக்க விரும்பவில்லை, ஆனால், அதே நேரத்தில் சில பகுதிகளில் சிறப்பாகச் செயல்பட முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.