அந்த சமயத்தில் என்னால் படுக்கையை விட்டு எழுந்திருக்க கூட முடியாது - மன அழுத்தம் குறித்து பேசிய உத்தப்பா

மன அழுத்தத்தால் தமது வாழ்க்கையில் பெருமளவு பாதிக்கப்பட்டதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-21 00:15 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா 2011-ம் ஆண்டு தாம் மன அழுத்தத்தின் உச்சியில் இருந்ததாக கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து வீரர் கிரகாம் தோர்பே மன அழுத்தம் காரணமாக தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டார் என்ற செய்திகளை நாம் கேட்டோம். கிரகாம் தோர்பே மற்றும் பல வீரர்கள் மன அழுத்தத்தால் உயிரிழந்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன் என்னுடைய சொந்த வாழ்க்கையிலும் நான் மன அழுத்தம் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்தேன். மன அழுத்தம் ஏற்பட்டால் நிச்சயம் அது நமது வாழ்க்கையை சீரழித்து விடும். நம் வாழ்க்கையை சுமையாக மாற்றிவிடும். வாழவே பிடிக்காது என்ற நிலை வந்துவிடும். நமக்கு நாமே ஒரு சுமையாக மதிப்பற்றவன் போன்ற உணர்வு ஏற்படும்.

நம்மை நேசிக்கும் மனிதர்களுக்கு நாமே சுமையாகி விட்டோமா என்று நினைக்கத் தோன்றும். உங்களுக்கு நம்பிக்கை என்பது கொஞ்சம் கூட இருக்காது. நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கடினமாகவும் சுமையாகவும் தெரியும். நீங்கள் ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டது போல் உணர்வீர்கள். அப்படிப்பட்ட மன அழுத்தத்தை நான் 2011-ம் ஆண்டு பல மாதங்களாக உணர்ந்தேன்.

படுக்கையை விட்டு என்னால் எழுந்திருக்க கூட முடியாது. என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கும். கண்ணாடி முன் நின்று என் முகத்தை பார்க்கவே எனக்கு தோன்றாது. முகத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு முதலில் வராது. வாழ்க்கையில் நாம் எப்படி இருக்க வேண்டும். ஆனால் நாம் எப்படி இருக்கிறோம் என்று நினைத்தேன். இதிலிருந்து வெளியே வர அனைவரும் மருத்துவர் உதவியை நாட வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்