யாகி புயல்: வியட்நாமில் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு

வியட்நாமில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 64 ஆக உயர்ந்தது.

Update: 2024-09-09 20:24 GMT

ஹனோய்,

பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி புயல் வீசியது. மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி புயல் கரையை கடந்தது. வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும் இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது.

புயல் வீச்சை தொடர்ந்து அங்கு இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகள், பள்ளிகள் உள்பட கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை நீரில் தத்தளித்து வருகின்றன.

புயல் காரணமாக அங்குள்ள மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு பிடுங்கி தூக்கி வீசப்பட்டன. இதனால் அங்கு மின்சாரம், குடிநீர், இணைய சேவை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தடைப்பட்டது. மேலும் அங்குள்ள சாங் போ நகரில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்தநிலையில் அங்குள்ள மலைபாங்கான காவ் பாங் மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனிடையே அங்கே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் ஒன்று இரண்டு துண்டுகளாக உடைந்து ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியது. அப்போது அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த பஸ்சில் பயணித்த 20 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்புத்துறையினர் பஸ் பயணிகளின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் வியட்நாமில் புயல் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 64 ஆக உயர்ந்ததாக அந்த நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. வியட்நாமைத் தாக்கும்முன், யாகி புயல் கடந்த வாரம் பிலிப்பைன்சில் 20 உயிர் இழப்புகளையும், தெற்கு சீனாவில் 4 உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்