இலங்கை அதிபர் தேர்தலில் இழுபறி.. எந்த வேட்பாளருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் அடுத்து என்ன நடக்கும்?

முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெறவில்லை எனில், வாக்காளர்களின் விருப்பத்தேர்வு வாக்குகள் எண்ணப்படும்.

Update: 2024-09-22 07:56 GMT

கொழும்பு:

இலங்கையில் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை பெற்றார். சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) 2-வது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்கே மூன்றாவது இடத்திலும் பின்தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் அனுரா குமார திசநாயகே பெற்ற வாக்குகள் 50 சதவீதத்தை தாண்டியது. இதனால் அவர் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால், 11 மணிக்கு பிறகு நிலவரம் சற்று மாறியது. அனுரா குமார திசநாயகே வாக்கு சதவீதம் படிப்படியாக சரிந்தது. சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் அதிகரிக்கத் தொடங்கியது

இன்று மதியம் 1 மணி நிலவரப்படி அனுரா குமார திசநாயகே 39.52 சதவீத வாக்குகளும், சஜித் பிரேமதாசா 34.28 சதவீத வாக்குகளும் பெற்றனர். ரணில் விக்கிரமசிங்கே 17.41 சதவீத வாக்குகளே பெற்றிருந்தார். தமிழ் வேட்பாளர் அரியநேத்திரன் 4.07 சதவீதம், நமல் ராஜபக்சே 2.38 சதவீத வாக்குகள் பெற்று 4வது மற்றும் 5வது இடத்தில் இருந்தனர்.

இலங்கையைப் பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாவிட்டால், வாக்கு எண்ணிக்கை அடுத்த சுற்றுக்கு நகரும். 50 சதவீத இலக்கை எட்டுவதற்கு கடும் போட்டி நிலவுவதால், இரண்டாவது சுற்றுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, இலங்கையில் வாக்காளர்கள் அளிக்கும் தரவரிசை வாக்களிப்பை அடிப்படையாக வைத்து அதிபர் தேர்வு செய்யப்படுவார். அதிபர் பதவிக்காக வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களை தங்கள் முன்னுரிமையாக வரிசைப்படி குறிப்பிடலாம்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் வாக்குச்சீட்டில் முதல் விருப்பத்தேர்வாக வாக்காளர்கள் குறிப்பிட்டிருக்கும் வேட்பாளர்கள் பெயர்களே கணக்கில் எடுக்கப்படும். முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெறவில்லை எனில், அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்களைத் தவிர அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்படுவார்கள்.

பின்னர் நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குகளில், வாக்காளர்கள் இரண்டாவது விருப்பத் தேர்வு வாக்குகள் எண்ணப்படும். அந்த வாக்குகள், ஏற்கனவே முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 வேட்பாளர்களுக்கு இருந்தால் அவர்களுக்கு மறுபகிர்வு செய்யப்படும். அதிலும் முடிவு எட்டப்படவில்லை என்றால், வாக்காளரின் மூன்றாவது விருப்ப வாக்குகள் பரிசீலிக்கப்படும். 2 வேட்பாளர்களில் ஒருவர் முழுமையான பெரும்பான்மையை பெறும் வரை இவ்வாறு விருப்பத்தேர்வு வாக்குகளை எண்ணும் பணி நடைபெறும்.

இலங்கை தேர்தல் வரலாற்றில் இவ்வாறு விருப்ப வாக்குகள் எண்ணப்படவேண்டிய நிலை இதுவரை வந்ததில்லை. 1982-ம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும், முக்கிய கட்சிகள் அல்லது கூட்டணிகளின் வேட்பாளர் முதல் சுற்றிலேயே அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளனர்.

பெரும்பாலும் இருமுனைப் போட்டிகளாகவே இருந்தன. இதன் விளைவாக, பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சீட்டுகளில் ஒரு வேட்பாளரை மட்டுமே தேர்வு செய்கிறார்கள். தங்கள் இஷ்டப்படி முன்னுரிமை அடிப்படையில் பல வேட்பாளர்களை வரிசைப்படுத்தலாம் என்பதை பல வாக்காளர்கள் அறியாமல் இருந்திருக்கலாம், அல்லது அந்த தனிச்சிறப்பு வசதியை பயன்படுத்த வேண்டாம் என்று விட்டிருக்கலாம்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது பலமுனைப் போட்டி நிலவுவதால், இழுபறி நீடிக்கிறது. எனவே, முதல் முறையாக விருப்பத் தேர்வு வாக்குகள் மூலம் வேட்பாளரின் வெற்றி தீர்மானிக்கப்பட உள்ளது. இந்த விருப்பத்தேர்வு வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்