கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்
கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே கரிபியன் கடலில்7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.;
வாஷிங்டன் டிசி,
கரீபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று மாலை (உள்ளூர் நேரப்படி) ஏற்பட்டது. இதையடுத்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹோண்டுராசின் வடக்கே, கேமன் தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார் 130 மைல் (209 கிலோமீட்டர்) தொலைவிலும், 10 கிமீ (6.21 மைல்) ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு கரீபியன் கடல் மற்றும் ஹோண்டுராசின் வடக்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்க அட்லாண்டிக் அல்லது வளைகுடா கடற்கரைகளில் சுனாமி எதிர்பார்க்கப்படவில்லை என்றும், புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நிலநடுக்கத்தால் உருவான "அபாயகரமான சுனாமி அலைகள்", கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பகாமாஸ், பெலிஸ், ஹைட்டி, கோஸ்டாரிகா, பனாமா, நிகரகுவா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் மையப்பகுதியிலிருந்து 620 மைல்களுக்குள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.