காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

Update: 2024-10-15 16:03 GMT

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மிதமான மழை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை விட்டுவிட்டு பெய்து வருவததால், சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தேங்கிய மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கில் 490 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரி மற்றும் ஆந்திரா நெல்லூர் பகுதியில் இருந்து 500 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.

மேலும் இது மேற்கு - வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி அதிகாலையில் வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடந்து நெல்லூர் - புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்