வேளாண்மைத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது: அரசு பெருமிதம்

உணவு உற்பத்தியில் தமிழ்நாடு முன்னேறியுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

Update: 2024-10-27 10:41 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள்பால் மிகுந்த அன்பு கொண்டு வேளாண்மைத் துறை என அழைக்கப்பட்ட துறையின் பெயரை - வேளாண்மை-உழவர் நலத்துறை எனத் தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டிலே அறிவித்து உழவர்களுக்காகப் பல சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார்கள். இத்திட்டங்களால் வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது. உழவர்கள் வளம் பெறுகின்றனர். தமிழ்நாடு உணவு உற்பத்தியில் முன்னேறியுள்ளது.

வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குத் திட்டமாக முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் வேளாண்மைக்கென தனிநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வேளாண் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை:-

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டுக்குப் பின் பயிர்க் காப்பீட் திட்டத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 29 லட்சத்து 34 ஆயிரம் விவசாயிகளுக்கு 5,148 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

பயிர்ச் சேதங்களுக்கு நிவாரணம்:-

கடந்த மூன்றாண்டுகளில் மழை, வறட்சி ஆகிய பேரிடர்களால் 19.84 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 833.88 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 11.95 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்

2021க்குப் பின் வடகிழக்குப் பருவமழை, 2022- தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை, மண்டஸ் புயல் - 2023 - சூறைக்காற்று, மிக்ஜம் புயல், தென் மாவட்டங்களில் பெருமழை பாதிப்புகள் ஆகியவற்றால் ஏற்பட்ட தோட்டக்கலைப் பயிர்கள் பாதிப்புகளுக்கு மட்டும் 1,19,519 விவசாயிகளுக்கு 91 கோடியே 7 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்:-

ஆதிதிராவிட - பழங்குடியின மக்களுக்கு 73.14 கோடி ரூபாயில் 1,311 கிணறுகள், மின்சார / சூரிய சக்தி பம்ப்செட்டுகள் 100 சதவிகித மானியத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. முதன் முறையக ஆதி திராவிடர்- பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உழவர் சந்தைகள்:-

27.5 கோடி ரூபாய் செலவில் 100 உழவர் சந்தைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 14 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 25 உழவர் சந்தைகளில் காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் உழவர்சந்தை புதுப்பொலிவுடன் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்:-

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மூன்று புதிய வேளாண் கல்லூரிகளும், ஒரு தோட்டக்கலை கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 7,700 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் 1,300க்கும் மேற்பட்ட மாணவிகள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் சேர்க்கப்பட்டுப் பயனடைந்துள்ளனர்.

உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு:-

திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய 2021-2022 முதலாண்டிலேயே உணவு தானிய உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம்-11.74 லட்சம் மெட்ரிக் டன் அதிகரித்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறுவை நெல்சாகுபடியில் 48 ஆண்டுகளில் இல்லாத சாதனை:-

187 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிலான குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் வாயிலாக விவசாயிகளுக்கு அளித்த ஊக்கத்தினால் 2021-ல் 4.90 இலட்சம் ஏக்கரிலும், 2022-ல் 5.36 லட்சம் ஏக்கரிலும் 2023-ம் ஆண்டில் 48 ஆண்டுகளாக இல்லாத சாதனையாக 5.59 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிசெய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் பயனடைந்தனர்.

வேளாண் கருவிகள் வழங்குதல்:-

திராவிட மாடல் அரசினால் ரூ.39.77 கோடி செலவில் 2,33,701 விவசாயிகளுக்கு வேளாண் கருவித் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பழங்குடியினருக்கு 90 சதவீத மானியத்திலும், சிறு குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

விருதுகள்:-

திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய 2021 முதல் வேளாண் துறையில் அடைந்துவரும் முன்னேற்றங்களுக்காகப் பல்வேறு விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2022-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் ஒரே இடத்தில் நான்கு மணி நேரத்தில் 6 லட்சத்து 3 ஆயிரம் மரக்கன்றுகளை வெற்றிகரமாக நட்டு முடித்தமைக்காக எலைட் உலக சாதனை புத்தகத்தில் தமிழ்நாடு இடம் பெற்றுப் பாராட்டப்பட்டது.

2023-ம் ஆண்டில் மக்காச்சோள படைப்புழு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை போன்ற சிறந்த ஆராய்ச்சித் திட்டங்களுக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டு SKOCH ஆர்டர் ஆப் மெரிட் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தலில் இயங்கும் சிறுதானிய மகத்துவ மையம் 2023-ம் ஆண்டிற்கான சிறந்த சிறுதானிய மையத்திற்கான இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழ்நாடு வேளாண்மைத்துறைக்குப் புகழ் சேர்த்துள்ளது. ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்ட மையம் என்ற விருதைப் பெற்றுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு பூங்கா:-

இப்படிப் பல்வேறு திட்டங்களின் மூலம் சிறப்பான முன்னேற்றங்கள் கண்டு பல விருதுகளைப் பெற்று வேளாண்துறை சென்னை மாநகரின் மையப் பகுதியில் கதீட்ரல் சாலையில் செங்காந்தன் பூங்கா அருகில் 6.09 ஏக்கர் நிலத்தில ரூ.25 கோடி செலவில் பொதுமக்களுக்குப் புத்துணர்வை அளிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்காவினை முதல்-அமைச்சர் 7.10.2024 அன்று திறந்து வைத்தார்.

இப்பூங்கா தமிழ்நாடு வேளாண்துறை வரலாற்றில் மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே ஒரு புதிய அணிகலனாக விளங்கி அனைவரையும் கவர்ந்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இத்தகைய சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப்பொருள்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்