ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை பிடித்து எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படை
ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை பிடித்து இலங்கை கடற்படை எச்சரித்து அனுப்பினர்.;

ராமேசுவரம்,
தமிழகம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் வழக்கம் போல் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த படகில் இருந்த 7 மீனவர்களிடம் விசாரணை நடத்திய இலங்கை கடற்படையினர் அந்த மீனவர்களை எச்சரித்து எந்த வழக்கும் பதிவு செய்யாமல் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் படகுடன் மீனவர்கள் நிம்மதியுடன் கரை திரும்பினார்கள்.