தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.;

Update:2025-03-23 12:52 IST
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

சென்னை,

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. சமீபத்திலும் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக மறியல் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை ரத்து செய்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த 14-ம் தேதி அன்று தமிழக பட்ஜெட் வெளியானதை தொடர்ந்து, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, "பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகும் அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடுத்தகட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும்" என்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் காந்திராஜ் தெரிவித்திருந்தார்.

இதன்படி ஜாக்டோ- ஜியோ சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் டாடாபாத் சிவானந்தா காலனியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோல திருநெல்வேலி, சேலம், திருச்சி,நாமக்கல், மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரத்திலும் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்