"கச்சத்தீவை விட்டு கொடுத்தது சரிதான்.." - செல்வப்பெருந்தகை
மீனவர்கள் நலனுக்காக கச்சத்தீவை மீட்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.;

சென்னை,
மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அனைத்துக் கட்சிகளும் கச்சத்தீவை இந்தியா மீட்க வலியுறுத்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. அரசு கொண்டுவந்த தனித் தீர்மானத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. அதேநேரத்தில் சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான், காங்கிரஸ் ஒருபோதும் அதைத் தவறு என்று சொல்லாது. வெறும் 282 ஏக்கர் நீர் இல்லாத வானம் பார்த்த பூமியை கொடுத்துவிட்டு, பல லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்தவர் இந்திரா காந்தி.
நடுவுல கொஞ்ச பக்கத்தைக் காணோம் என்பதைப் போல சில உண்மை வரலாறுகளை மறந்து பேசுகிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கச்சத்தீவு தேவை என்ற தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.
அதனால் தீர்வுகண்டால் எங்களைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் கிடையாது. நாங்கள் எப்போதுமே மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.