கனமழை எதிரொலி: இதுவரை எத்தனை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா..?

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-15 14:14 GMT

கோப்புப்படம்

சென்னை,

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என்றும் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் கன மழை பெய்து வரும் பெய்து வரும் நிலையில் வானிலை மையம் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரத்தில் அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்வதால் கனமழை நீடிக்கும். இதன்படி அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னைக்கு இன்றும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளோம். சென்னையில் ஒரு சில பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அடுத்த 4 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளநிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (16-10-2024) விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 4 மாவட்டங்களிலும் நாளை முக்கிய துறைகள் தவிர பிற அனைத்து அரசு துறைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

*மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

* கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16-10-2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

* கனமழை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

* கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* கனமழை எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்