கனமழை எச்சரிக்கை: திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க மாவட்ட கலெக்டர் கோரிக்கை

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை மாலை தொடங்குகிறது.

Update: 2024-10-15 15:42 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலமானது நாளை (16.10.2024) மாலை 8.00 மணி முதல் நாளை மறுநாள் (17.10.2024) மாலை 5.38 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 17-ந் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் அறிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வயதானவர்கள், குழந்தைகள், உடல் நலிவுற்றவர்களுக்கு மழையினால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக மழைப் பொழிவினை பொறுத்து பக்தர்கள் தங்கள் பயண திட்டங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பெருமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைபாதிப்புகள் தொடர்பான மழை தொடர்பான பாதிப்புகள் -1077, 04175-232377, மின்சாரம் தொடர்பான பாதிப்புகள் 94987 94987 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்