ஆண்டு இறுதித் தேர்வு: வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை
வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டியே கசிந்துவிடாதபடி முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.;

கோப்புப்படம்
பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு முடிந்ததும், அதனைத் தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடைபெறும். அந்த வகையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.
கடந்த ஆண்டில் இதேபோல் ஆண்டு இறுதித் தேர்வின் போது, சில தேர்வுகளுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் இறுதித் தேர்வில் அதிக கவனமுடன் செயல்படவேண்டும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிகளுக்கு, கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆண்டு இறுதித் தேர்வுகளின்போது தேர்வுக்குரிய வினாத்தாள்களை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) தளத்தில் பதிவிறக்கம் செய்து பிரதிகள் எடுக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டியே கசிந்துவிடாதபடி முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அதேநேரம் வரும் காலங்களில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தால் அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்கள், அந்த ஒன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மீது கடுமையாக துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே தேர்வுப் பணிகளில் சுணக்கம் இன்றி கவனமாக செயல்படுவதோடு, ஆண்டு இறுதித் தேர்வை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காதவாறு முடிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.